சென்னை: தமிழகம் முழுவதும் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலங்கள் தடுப்பணைகள், கட்டடங்கள், குடியிருப்புகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
மொத்தம் 352 கோடி ரூபாய் செலவில் இவை கட்டப்பட்டுள்ளன. பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை மற்றும் வீட்டுவசதித் துறை சார்பில் இவை கட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வன்னியம்பட்டி - மணியம்பலம் சாலையில் வெள்ளாற்றின் குறுக்கே ரூ.6 கோடியே 42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பாலத்தை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே முதல்வர் பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போல் திருநெல்வேலி, திருவண்ணாமலை, தர்மபுரி, திருவாரூர், கரூர், ஈரோடு, திருப்பூர், மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் ரூ.29 கோடியே 85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 13 பாலங்கள், அலுவலக கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
இதே போல் பொதுப்பணித் துறையின்கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்கள் வழியே செல்லும் நொய்யல் ஆற்று அமைப்பில் 158.35 கிலோ மீட்டர் வரை உள்ள அணைக்கட்டுகள், குளங்கள், ஆறு மற்றும் கால்வாய்களை விரிவாக்குதல், புனரமைத்தல், நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் ரூ.230 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டியதாக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் 480 அடுக்குமாடி குடியிருப்புகள், தஞ்சை, அரியலூர், சென்னை மாவட்டங்களில் 560 குடியிருப்புகள், ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் 1,232 அடுக்குமாடி குடியிருப்புகளையும் முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் திறந்து வைத்துள்ளார்.