சிவகங்கை: கொரோனா கிருமித்தொற்று விவகாரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி வருகின்றனர்.
இந்நிலையில் யாசகம் பெற்று சேமித்த ஐந்தாயிரம் ரூபாயை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவரை பலரும் பாராட்டி உள்ளனர்.
சிவகங்கை அருகே உள்ள மலை அழகிச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்த 87 வயதான முத்துக்கருப்பன் என்ற அந்த முதியவர் கடந்த பத்து ஆண்டுகளாக அங்குள்ள சித்தர் கோவில் வாசலில் யாசகம் பெற்று வருகிறார்.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பே இவர் தன் மனைவி, இரண்டு பிள்ளைகளை விட்டுப் பிரிந்து யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார்.
இதன் மூலம் கிடைத்த தொகையை நிவாரண நிதியாக வழங்க அவர் முன்வந்தது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
முதியவர் செயலைப் பாராட்டி வட்டாட்சியர் மைலாவதி அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.