தமிழகத்தில் 50% பேருந்துகளை இயக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

தமிழகத்தில் 50% பேருந்துகளை இயக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

2 mins read
d9b5613f-ad0f-49d3-ba6b-61429f9cb112
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகியவை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 50% பேருந்துகளை இயக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கோப்புப்படம்: ஊடகம். -

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகியவை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயக்கப்படும் என மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார்.

நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் இம்மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்றும் மூன்று கட்டங்களாகத் தளர்வுகள் இடம்பெறும் என்றும் இந்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்திலும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார். ஜூன் 8ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை தமிழகத்தில் அவை திறக்கப்படாது.

பொதுப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க ஏதுவாக தமிழகம் எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஏழாவது, எட்டாவது மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை தவிர்த்து, மற்ற மண்டலங்களுக்குள் 50% பேருந்துகள் இயக்கப்படும். தனியார் பேருந்துகளையும் இயக்க முடியும். அதே நேரத்தில், மொத்த இருக்கைகளில் 60% இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் இரண்டு பயணிகள்உடனும் வாடகை டாக்சிகள் மூன்று பயணிகளுடனும் இயங்கலாம்.

அதே வேளையில், மாநிலங்களுக்கு இடையிலான பேருந்துப் போக்குவரத்துக்குத் தடை நீடிக்கிறது. மெட்ரோ ரயில்களும் மின்சார ரயில்களும் இயக்கப்படாது. அனைத்துலக விமானப் போக்குவரத்திற்கான தடை தொடர்கிறது.

சென்னையில் தனியார் நிறுவனங்கள் 50% ஊழியர்களுடனும் மற்ற பகுதிகளில் 100% ஊழியர்களுடனும் இயங்கலாம். எனினும், இயன்ற வரையில் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

கடைத்தொகுதிகள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் 50% ஊழியர்களுடன் செயல்படலாம். ஆயினும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் ஐவர் மட்டுமே கடைக்குள் இருக்க வேண்டும். குளிர் சாதனங்கள் இயக்கப்படக்கூடாது.

இம்மாதம் 8ஆம் தேதி முதல் 50% இருக்கைகளில் மட்டும் என்ற நிபந்தனையுடன் உணவகங்களில் அமர்ந்து உண்ண முடியும்.

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இப்போதுள்ள நடைமுறைகளின்படி எவ்விதத் தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் ஐவருக்கு மேல் கூட அனுமதியில்லை. இறுதி ஊர்வலங்களிலும் அது சார்ந்த சடங்குகளிலும் அதிக பட்சம் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம். அதுபோல, திருமண விழாக்களில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது.

பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் இப்போதைக்குத் திறக்கப்படாது. அங்கு இணைய வழி கல்வியைத் தொடரும்படி ஊக்குவிக்கப்படுகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.