சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கிருமித்தொற்று கூடி வருகிறது. அந்தக் கிருமி ஏற்படுத்தி வரும் மரணங்களும் அதிகரிக்கின்றன. அதேவேளையில், தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைவோர் அளவு குறிப்பிடத்தக்க அளவுக்குக் கூடி வருகிறது.
அந்த மாநிலத்தில் நேற்றுக் காலை 8 மணி நிலவரப்படி 21,184 பேரைக் கிருமி தொற்றி இருந்தது. 160 பேர் மரணமடைந்துவிட்டார்கள். மொத்தம் 12,000 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். கிருமி தொற்றியோரில் குணமடைவோர் அளவு 56 விழுக்காடாக அதிகரித்து உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக மருத்துவ
மனைகளில் 9,021 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 479,155 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சனிக்கிழமை மட்டும் ஒரே நாளில் வரலாறு காணா அளவுக்கு கொரோனா கிருமி மொத்தம் 938 பேரைப் பிடித்தது.
அவர்களில் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வந்தவர்கள் மொத்தம் 82 பேர். அன்று மட்டும் ஆறு பேர் மரணமடைந்துவிட்டார்கள். சுமார் 700 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில்தான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
சென்னையை அடுத்து செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருகிறது.
இவ்வேளையில், செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர், நோயாளிகளிடம் அநியாயமாகக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தனியார் மருத்துவமனைகளைக் கடுமையாக எச்சரித்தார்.
சென்னை அருகே புளியந்தோப்பில் புதிதாக அமைக்கப்பட்டு இருக்கும் 1,400 படுக்கைகளைக் கொண்ட கொவிட்-19 சிகிச்சை நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அதிகக் கட்டணம் வசூலித்தால் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
படுக்கை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டணங்களை அரசாங்கம் நிர்ணயிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
காப்புறுதிப் பாதுகாப்பு இருப் போருக்கு ஒரு பரிசோதனைக்கு ரூ. 2,500 வசூலிக்கப்படும் என்றார் அவர். இதற்கிடையே, மாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனைக் கூடங்களின் எண்ணிக்கையை 72 ஆக அரசாங்கம் அதிகரித்தது.
மருத்துவக் கல்லூரிகள் ஒருபுறம் இருக்க, இதர 10 கல்லூரிகளும் பரிசோதனை மற்றும் சிகிச்சைக் கூடங்களாக மாற்றப்பட்டு இருப்பதாக அமைச்சர் கூறினார்.
வெளி மாநிலங்களில் இருந்து குறிப்பாக மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் திரும்புவோர் கிருமித்தொற்றுடன் வருகிறார்கள்.
இதுவரையில் 991 பேர் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட சுகாதார அமைச்சர், மக்களுக்கு அச்சமூட்டும் அளவுக்கு ஊடகங்கள் தவறான புள்ளிவிவரங்களைத் தெரிவிக்கக்கூடாது என்றார்.