சென்னை: தமிழ்நாட்டிற்கு அதிகமாக மழையைத் தரக்கூடிய தென்மேற்குப் பருவமழை கேரளாவில் இன்று தொடங்குகிறது. இதன் காரணமாக தென் தமிழகம், உள் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாகவும் இது நாளை புயலாக வலுவடைந்து மேற்கு கடற்கரையை ஒட்டி வடகிழக்குத் திசையில் நகர்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அது தெரிவித்து உள்ளது.
இதன் விளைவாக தென்கிழக்கு, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளிலும் லட்சத்தீவு மற்றும் கேரள கடற்கரைப் பகுதியிலும் சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மீனவர்கள் இதைக் கருத்தில்கொண்டு கரையிலேயே இருக்க வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.
தமிழ்நாட்டில் திருப்பூர், கோவை, வேலூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் சில இடங்களில் நேற்று மழை பெய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டில் தென்மேற்குப் பருவமழை குறித்த காலத்தில் தொடங்குவதாகவும் அதிக மழை பெய்யும் என்றும் தெரிகிறது.