ஒரே நாளில் 11 பேர் பலி; சென்னையில் 17,598 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
புதன்கிழமை ஒரே நாளில் 1,286 பேருக்கு கிருமி தொற்றியது உறுதியானது. மேலும் அன்றைய தினம் மட்டும் 11 பேர் கொவிட்-19 நோய்க்குப் பலியாகினர்.
புதன்கிழமையன்று 27 மாவட்டங்களில் புதிதாக நோய்த்தொற்று இருப்பது தெரியவந்தது. அதிகபட்சமாக சென்னையில் 1,012 பேரும், செங்கல்பட்டில் 61 பேரும், திருவள்ளூரில் 58 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூரில் 2 பேருக்கும், தர்மபுரி, கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தேனி, விழுப்புரம், விருதுநகரில் தலா ஒருவருக்கும் கிருமி தொற்றியது உறுதியானது.
தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 208ஆக அதிகரித்துள்ள நிலையில், இதுவரை 14,316 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். வியாழக்கிழமை காலை நிலவரப்படி 11,345 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 59 குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட 185 முதியவர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
“தமிழகத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 14,101 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் இதுவரை 5,28,534 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 17,598 பேருக்கு கொவிட்-19 நோய் தாக்கியுள்ளது. இவர்களில் 9,034 பேர் குணமடைந்துள்ளனர். 158 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 3,224 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கோடம்பாக்கத்தில் 2,029 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,798 பேருக்கும், அண்ணாநகரில் 1,525 பேருக்கும் கிருமித்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது என்றும் சுகாதார அமைச்சின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
கடந்த திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று தினங்களில் மட்டும் தமிழகத்தில் 3,539 பேர் கொரோனா கிருமியின் பிடியில் சிக்கி உள்ளனர். இதையடுத்து அங்கு மேலும் சில நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.