சென்னை: பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றவாறு மக்கள் தொகை அடிப்படையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தளர்வுகள் இல்லை என்றால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாக நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் தொகை ஒரு கோடிக்கும் அதிகம் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இத்தகைய பகுதிகளில் கொரோனா கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது சிரமம் என்றார்.
எனினும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் பொதுமக்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார். மேலும் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் கேட்டுக் கொண்டார்.
144 தடை உத்தரவு மற்றும் மீன்பிடி தடைக் காலத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ மக்கள் ஆயிரம் பேருக்கு அவர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.