திண்டுக்கல்: காட்டு எருமைகள் திடீரென நகருக்குள் நுழைந்ததால் கொடைக்கானல் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஊரடங்கு காரணமாக கொடைக்கானல் பகுதியில் வாகனப் போக்குவரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் வழக்கமான இரைச்சல் குறைந்துள்ளதை அடுத்து, வனப்பகுதியை விட்டு வெளியே வரும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவை அவ்வப்போது நகர்ப் பகுதிக்குள் ஊடுருவுகின்றன.
அந்த வகையில் அண்மைய சில நாட்களாக கொடைக்கானல் பகுதியில் ஏராளமான காட்டு எருமைகளைக் காண முடிகிறது. அவை குட்டிகளுடன் வலம் வருகின்றன.
நேற்று காலை கொடைக்கானல் நகர்ப்பகுதியில் உள்ள அண்ணாசாலையில் பத்துக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக உலா வந்தன. அவற்றின் குட்டிகள் அங்குமிங்குமாக ஓடித்திரிந்தன. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் பீதியில் ஓட்டம்பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து காட்டெருமைகளை இரண்டு மணி நேரம் போராடி மீண்டும் காட்டுப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
காட்டெருமைகளின் திடீர் வருகையால் சில மணி நேரங்களுக்குப் பரபரப்பு நிலவியது.