சென்னை: புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு, அவர்களுக்கு நன்றியற்றவர்களாக இருக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனவே தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் உணவு, தங்கும் இடம், மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுப்பது மாநில அரசின் கடமை என்று குறிப்பிட்டனர்.
எனவே, அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்து கொடுத்த வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக வாதிட்ட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் தமிழக அரசு செய்து வருவதாக கூறினார்.
மத்திய அரசின் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் ராஜகோபாலன், மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.