மதுரை: கோயில்களின் நகரமான மதுரையில் முடிதிருத்தும் கடையை நடத்தி வரும் சி. மோகன் என்பவரின் 13 வயது மகள் எம்.நேத்ரா ஏழைகளுக்கான நல்லெண்ணத் தூதராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
“எங்களுக்கு இந்தச் செய்தியை கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது,” என்று ஐஏஎன்எஸ் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் மோகன் கூறியுள்ளார்.
மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்தவர் மோகன். முடிதிருத்தும் கடையின் உரிமை யாளரான இவர், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 615 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் போன்றவற்றை வழங்கினார்.
இதற்காக நேத்ராவின் படிப்புக்காகச் சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தையும் செலவிட்டார் மோகன்.
ஒன்பதாவது வகுப்பில் படித்து வரும் நேத்ரா, ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, மக்களுக்கு மோகன் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரியவந்ததை அடுத்து, அவர் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் இதுகுறித்து சுட்டிக்காட்டிப் பேசினார்.மோகனுக்கு பாராட்டும் தெரிவித்தார். இதையடுத்து மோகன் தன் குடும்பத்தினருடன் பாஜகவில் இைணந்தார்.
இந்நிலையில், நேத்ராவை ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக வளர்ச்சி, அமைதிக்கான ஐநா சபை அறிவித்துள்ளது. மேலும் அவருடைய எதிர்காலத்திற்காக ஒரு லட்ச ரூபாயை ஊக்கத் தொகையாகவும் வழங்கி உள்ளது.
ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மாநாட்டில் வறுமை தொடர்பாக பேசவும் மாணவி நேத்ராவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.