சென்னை: கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் (படம்) கவலைக்கிடமாக இருப்பதாக முன்பு கூறப்பட்ட நிலையில், இப்ேபாது அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரேலா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
திமுகவின் சென்னை மேற்கு மண்டலச் செயலாளரும் திருவல்லிக்கேணித் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகனுக்கு கடந்த 2ஆம் தேதி கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதிப் படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ரேலா மருத்துவ மனையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், “கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை,” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, “80% ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 60% மட்டும் செலுத்தப்பட்டால் போதுமானது என்கிற அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,” என்று அன்பழகனின் சகோதாரர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதற்கிடையே, அன்பழகனின் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் விவரம் கேட்டறிந்த முதல்வர் பழனிசாமி, விரைவில் அவர் பூரண நலம்பெற இறைவனை வேண்டிக்கொள்வதாக டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அன்பழகன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அங்கு அவருக்கு அளித்துவரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.