ராஜபாளையம்: ராஜபாளையத்தின் முறங்கு அருகேயுள்ள மாங்குடியைச் சேர்ந்த பெருமாள்பட்டி என்னும் ஊரில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த 5 அடி உயரமுள்ள கொற்றவை சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விவசாயி கருப்பையா, தனது நிலத்தில் உழுதுகொண்டிருக்கும் போது இந்தச் சிலை தட்டுப்பட்டது.
இந்தச் சிலை நான்கு கைகளும் உடைந்த நிலையில் காணப்பட்டது. சிலை நிறுத்தப்பட்டுள்ள ஆசனக்கல் மற்றும் கொற்றவையின் வாகனமான கலைமான் சுருங்கிய கொம்புகளுடன் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளது.
கொற்றவை சிலையின் உருவ அமைப்பைக் கொண்டு பார்க்கும்போது முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த அரிய வகை சிலையாக கருதப்படுகிறது.
ஆவுடையாபுரம் பகுதியில் ஏற்கெனவே 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நந்தி சிலை, தமிழ் கல்வெட்டு, விநாயகர் சிலை மற்றும் பல கல்தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத் துறை உதவி பேராசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான கந்தசாமி. அவ்வகையில் பழமையான கொற்றவை சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு கோவில் அழிந்திருக்கலாம் என்பதை கள ஆய்வின் மூலமாக இப்பகுதி வரலாற்றை உறுதிப்படுத்த முடியும் என்றார்.
வடஇந்தியாவில் கொற்றவைக்கு சிங்கம் மற்றும் புலி போன்றவை வாகனமாக காட்டப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் கலைமான் கொற்றவையின் வாகனமாகக் காட்டப்படுவது அரிதாக உள்ளது.
வடதமிழகத்தில் எடுக்கப்பட்ட மான் வாகனத்தைக் கொண்ட கொற்றவை சிலை ஒன்று சென்னை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தென்தமிழகத்தில் கொற்றவையின் வாகனமாக கலைமானுடன் உள்ள சிலை இப்போதுதான் முதன்முதலாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சங்க இலக்கியம், சிலப்பதிகாரத்தில் கொற்றவை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. பாலை நில மக்களின் முக்கிய கடவுளாகவும் போர் வீரர்கள் வணங்கும் தெய்வமாகவும்கூட கொற்றவை வழிபாடு இருந்துள்ளது. தற்போது கொற்றவை வழிபாடு பிடாரி, காளி, துர்க்கை போன்ற கடவுளர் வழிபாட்டோடு சேர்க்கப்பட்டுள்ளது.