சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள் மூவருக்கு 'கொவிட்-19' கிருமித் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மூன்று நீதிபதிகளுடன் நீதிமன்றத்தின் பதிவுத்துறை அதிகாரிக்கும் இதர ஊழியர்கள் சிலருக்கும் இத்தொற்று பரவியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள தகவல் களை அடுத்து, வழக்குகளை விசாரணை செய்யும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, அவசர வழக்குகளை மட்டும் வீட்டில் இருந்தவாறே காணொளிக் காட்சி வழியாக விசாரிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக வழக்கு விசாரணைகளை நீதிமன்றத்திலேயே நேரடியாக நடத்தும்படி பார் கவுன்சிலும் வழக்கறிஞர் சங்கங்களும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் காணொளிக் காட்சி வழியாக மட்டுமே விசாரணை நடத்துவதற்கு சாத்தியப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்து தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் மூத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழு கூடி விவாதித்தது.
இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் சி.குமரப்பன் வெளியிட்ட அறிவிப்பில், "மற்ற பகுதிகளை விடவும் சென்னையில் கிருமித்தொற்றின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது.
"அத்துடன், நீதிமன்றம் வந்து செல்வதற்கான உகந்த சூழலும் இல்லாததால் உயர் நீதிமன்றம் இயங்குவதற்கு வேறு அணுகு முறையைப் பின்பற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
"உயர் நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்களின் போக்குவரத்துக்கும் பிரச்சினைகள் தொடர்கின்றன.
"இது நீதிபதிகளின் பணியிலும் பாதுகாப்பு ஊழியர்களின் பணி யிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
"எனவே, தற்போதைய சூழ்நிலையில் அவசர வழக்குகளை மட்டுமே காணொளிக் காட்சி வழியாக விசாரணை நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
"இந்த நடைமுறை புதிய முடிவு எடுக்கும் வரை அல்லது இம்மாதம் முழுவதும் அமலில் இருக்கும்," என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நடப்பில் இருந்து வரும் ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் அவசர வழக்குகளை மட்டும் காணொளிக் காட்சி வழி விசாரிக்க ஒன்பது நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து ஜூன் 1 முதல் அனைத்து நீதிபதிகளும் உயர் நீதிமன்றம் வந்து வழக்குகளை விசாரிப்பது எனவும் வழக்கறிஞர்கள் யாரையும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறினர்.
அதன்படி கடந்த வாரம் உயர் நீதிமன்றத்துக்கு வந்த அனைத்து நீதிபதிகளும் தங்கள் அறைகளில் அமர்ந்து காணொளிக் காட்சி வழியாக விசாரணை நடத்தினர்.
உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தபடி விசாரணை நடந்தது. இருப்பினும் ஒருவாரம் கூட இந்த நடைமுறையைத் தொடரமுடியாமல் நீதிபதிகள் உள்ளிட்ட பலருக்கும் கிருமித்தொற்று பரவி உள்ளதால் மீண்டும் பழையபடி வீட்டில் இருந்தபடியே விசாரணைகள் நடத்த முடிவெடுத்துள்ளனர்.

