10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்பு

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்பு

2 mins read
6d872463-c145-4e3e-a9d3-464c9ee45e23
பட்­டப்­ப­டிப்பை மட்டுமின்றி 10, 12ஆம் வகுப்­பு­க­ளி­லும் தமிழ் வழி­யில் படித்­தி­ருந்­தால் அர­சுப்­ப­ணி­யில் முன்­னு­ரிமை வழங்க வழி­வகை செய்­யும் சீர்திருத்த மசோதா சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று தாக்­கல் செய்­யப்­பட்­டது.  படம்: ஊடகம் -

சென்னை: எதிர்வரும் மாதங்களில் கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் உச்ச நிலையை அடையக்கூடும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று விசாரணையின் போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில் பொதுத்தேர்வை நடத்த இதுவே சரியான நேரம் என்றார். எதிர்வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தமிழகத்தில் கொரோனா கிருமியின் தாக்கம் அதிகரிக்கும் என்றும், இதனால் மாநிலத்தில் 2 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும் நிபுணர்கள் கூறியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், தேர்வு நடத்தப்பட்டு மாணவர்களிள் வாழ்வு பாதிக்கப்பட்டாலோ, இறக்க நேரிட்டாலோ யார் பொறுப்பு? என நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.

பின்னர் அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதற்கிடையே நடிகரும் முன்னாள் தொலைக்காட்சி செய்தியாளர் வரதராஜன் தவறான தகவலைப் பரப்பியுள்ளதாகவும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் காணொளிப்பதிவு ஒன்றை வெளியிட்ட வரதராஜன், கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட தனது உறவினருக்கு சென்னையில் எந்த மருத்துவமனையிலும் அனுமதி கிடைக்காததால் மிகவும் சிரமப்பட்டதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதை சமூக வலைத்தளங்களில் பலரும் பரவலாகப் பகிர்ந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னையில் எந்த மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பிவிட்டன என்பதை வரதராஜன் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

"தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை என்றால் அதை நிரூபிக்க வரதராஜனை என்னுடன் நேரடியாக மருத்துவமனைக்கு வரச் சொல்லுங்கள். நான் அழைத்துச் செல்கிறேன். அரசைப் பாராட்டவில்லை என்றாலும் செய்தியாளர் வரதராஜன் தவறான தகவலைப் பரப்பக்கூடாது," என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

இதற்கிடையே தமிழகத்தில் கொவிட்-19 நோயால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 269 பேர் பலியாகியுள்ளனர்.

17 ஆயிரம் பேர் நோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எனினும் கடந்த மே 31ஆம் தேதி முதல் தற்போது வரை தினமும் பதிவாகும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேல் இருப்பது நிபுணர்களை கவலை கொள்ள வைத்துள்ளது.