கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய உத்திகளைக் கையாள இருக்கிறது சென்னை மாநகராட்சி.
தமிழக தலைமை செயலாளர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், 12,000க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களை உள்ளடக்கிய சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் ஒரு முகாமை அமைத்து அந்தப் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை வீடுகளுக்குச் சென்று கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு சிறப்பு மருத்துவர் பணியில் இருப்பார்.
மேலும் முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், தனிமைப்படுத்தல் போன்றவை பின்பற்றப்படுவதையும் இந்தக் குழு உறுதி செய்யும்.
முதியவர்கள்,குழந்தைகள்,சர்க்கரை நோயாளிகள் மற்றும் பிற நோயால் பாதிக்கப்பட்டவர்களை மூன்று நாட்களுக்கு ஒருமுறை வீட்டில் சென்று பார்க்கும் மருத்துவப் பணியாளர்கள், அவர்களுக்குத் தேவையான சிகிச்சையும் வழங்குவர்.
இந்த திட்டங்கள் மூலம் சென்னையின் அனைத்து பகுதிகளையும் ஒரே நேரத்தில் கண்காணிக்க முடியும் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்று மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அத்துடன், பொதுமக்களும் தங்கள் பங்கை முறையாக ஆற்றினால் மட்டுமே கிருமித்தொற்றிலிருந்து தப்ப முடியும் என்பதையும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online