புதுடெல்லி: விவேக கைபேசி இல்லாததால் 56 விழுக்காடு மாணவர்கள் இணையம் வழியிலான வகுப்புகளில் பங்கேற்க இயலவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக ஸ்மைல் பவுண்டேஷன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் நாடு தழுவிய அளவில் அண்மையில் நடத்திய ஆய்வின் மூலம் பல விவரங்கள் தெரியவந்துள்ளன.
கொரோனா கிருமித்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து இணையம் வழி வகுப்புகளை நடத்த பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
எனினும் நாடு முழுவதும் சுமார் 56 விழுக்காடு மாணவர்களிடம் நவீன கைபேசிகள் இல்லை என்பதும் 31 விழுக்காடு மாணவர்களின் வீடுகளில் தொலைக்காட்சி வசதி இல்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, இம்மாணவர்களால் எந்த முறையிலும் இணைய வகுப்பில் பங்கேற்க இயலாது என ஆய்வை நடத்திய அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
டெல்லி, குஜராத், தமிழகம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 23 மாநிலங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களிடம் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

