சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக இதுவரை இல்லாத வினோதங்கள் எல்லாம் நிகழ்ந்து வருகின்றன. மாநிலம் முழுவதும் நகர்புறங்களிலும் கிராமப் பகுதிகளிலும் செயல்பட்டு வந்த பானிப்பூரி, பஞ்சுமிட்டாய், பாதாம் கீர் தள்ளுவண்டிக் கடைகள் எல்லாம் போன இடம் தெரியவில்லை.
அந்தக் கடைகளுக்குச் சொந்தக் காரர்களான வட இந்தியர்களின் குரலையும் கேட்க முடியவில்லை.
இந்தியாவின் பீகார், ஒடிசா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர் முதலான வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வறுமையை விரட்டி வருவாயைக் காண்பதற்காகக் குடும்பங்களுடன் தமிழகம் படையெடுத்தனர்.
அவர்கள் எல்லாம் கட்டுமானத் துறைகளிலும் ஜவுளித் துறை, கால்நடைத் துறை, உணவகங்கள் போன்ற பல துறைகளில் பணியாற்றி வந்தார்கள்.
நண்பர்களையும் தங்களுடன் வரவழைத்துக் கொண்டு கைத்தொழில்களையும் செய்து பிழைத்து வந்த வட இந்தியர்கள், தள்ளுவண்டிக் கடைகளில் ஒருமித்த கவனம் செலுத்தினர்.
மாநிலத்தின் ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளிலும் பானிப்பூரி, பஞ்சுமிட்டாய், பாதாம் கீர் கடைகளை நடத்தி மக்களிடம் பெரும் வரவேற்றைப் பெற்றனர்.
பஞ்சுமிட்டாய், சமோசா, பாதாம் கீர் குரல்களைக் கடைத்தெருக்களிலும் திருவிழாக்களிலும் கூட்டமான இடங்களிலும் சாராயக்கடை அருகிலும் கேட்க முடிந்த காலம் இப்போது மலையேறிவிட்டது.
கொவிட்-19 காரணமாக தமிழகமே முடங்கிவிட்ட நிலையில், வட இந்தியர்கள் அந்த மாநிலத்தில் காலம் தள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
உணவு, உடை, இருப்பிடம், வேலை எதுவுமின்றி தவித்து வந்த ஆயிரக்கணக்கான வட இந்திய ஊழியர்கள் சிறப்பு ரயில்கள் மூலமாகவும், பேருந்து மற்றும் கால்நடையாகவும் தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுவிட்டார்கள்.
அவர்கள் மாநிலத்தைவிட்டுச் சென்றுவிட்டதால் பானிப்பூரி விற்கும் தள்ளுவண்டிக் கடைகளும் போன இடம் தெரியவில்லை.
"இப்போதெல்லாம் அத்தகைய கடைகளைக் காண்பது அரிதாகிவிட்டது. மொட்டை மாடியில் நின்று சுற்றிச் சுற்றிப் பார்த்தாலும் ஒரு கடைகூட கண்ணில் படவில்லை. ஒருவர்கூட இல்லை," என்று தஞ்சாவூரைச் சேர்ந்த நகரவாசி ஒருவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், உத்தரப் பிரதேசம் நோக்கி புறப்பட்ட தள்ளுவண்டிக் கடை உரிமையாளர் ஒருவர், "காலம் மாறும் நாங்கள் தமிழ்நாடு திரும்பி வருவோம். அதுவரையில் எங்கள் பானிப்பூரி, பாதாம் கீர் சுவையும் எங்கள் குரலும் உங்களுக்கு எங்களை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்," என்று தெரிவித்துவிட்டு தன் ஊருக்கு நடை யைக் கட்டினார்.

