சென்னை: கொவிட் 19 கிருமித்தொற்றுடன் காணாமல் போன 277 பேரில் 90 பேர் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக சென்னை போலிசார் தெரிவித்துள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணியும் தொடர்ந்து வருகிறது.
காணாமல் போனவர்களால் நல்ல உடல்நிலையுடன் உள்ள மற்றவர்களுக்கும் இத்தொற்று பரவி விடும் அபாயம் உள்ளதால் சென்னைவாழ் மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.
இந்நிலையில், காணாமல் போன 277 கொரோனா நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினரை சென்னை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளது மக்களை சற்றே நிம்மதி அடைய வைத்துள்ளது.
சென்னையில் மே 23 முதல் ஜூன் 11ஆம் தேதி வரை நடத்தப் பட்ட கொரோனா பரிசோதனையில் 277 பேருக்கு கொவிட் 19 கிருமித்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, கிருமித் தொற்றுள்ளவர்களைத் தொடர்புகொண்டபோது அவர்களது கை பேசிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. வீட்டு முகவரியும் போலியானதாக இருந்ததால் சென்னை நகராட்சி அலுவலர்கள் சென்னை காவல்துறையில் இதுகுறித்து புகார் செய்தனர்.
இதையடுத்து 'சைபர் கிரைம்' போலிசார் உதவியுடன் 277 பேரைக் கண்டறியும் முயற்சியில் தற்போது 90 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்களைத்தான் அதிகம் காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
எங்கள் அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சரிபார்த்து, அங்கு வழங்கப்பட்ட தொலைபேசி எண்களில் காணாமல் போனவர்களுடன் தொடர்புகொண்டனர்.
முகவரி அல்லது தொலைபேசி எண் சரியாக இருந்ததால் 277 பேரில் 90 பேரை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பொதுமக்கள் நோயாளியைப் புறக்கணிக்கத் தொடங்குவதால் இது அவர்களிடம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

