சென்னை: சித்த மருத்துவ முறையில் 5 நாட்களில் கொவிட்-19 நோயாளிகள் குணமடைவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழக அரசு அந்த முறையை கடைப்பிடிக்க வேண்டும் என பாமக இளையரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதன் மூலம் சென்னையில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாகக் குணப்படுத்தி, சென்னையை கொவிட்-19 நோய் இல்லாத நகரமாக மாற்ற முடியும் என அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா கிருமித்தொற்றால் சீனா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து விரைவாக மீண்டு வர பாரம்பரிய சீன மருத்துவ முறைதான் துணை நின்றது என்று குறிப்பிட்டுள்ள அன்புமணி, சென்னையில் இப்போதும் சில கிருமித்தொற்று சிகிச்சை மையங்களில் உள்ள நோயாளிகளுக்கு சித்த மருத்துவம் வழங்கப்படுவதாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.
அந்த மையங்களில் உள்ளவர்கள் மற்ற மையங்களில் உள்ளவர்களை விட விரைவாக குணமடைந்து வீடு திரும்புவதாகவும், கொவிட்-19 நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
"சென்னையில் உள்ள தாம்பரம் சித்த மருத்துவ நிறுவனம் கண்டுபிடித்துள்ள சிகிச்சை முறை நிரூபிக்கப்பட்டது என்பதால் அதைப் பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையிலான மக்களை விரைவாகக் குணப்படுத்த வேண்டும்.
"கிருமித்தொற்றைப் போக்கும் இந்த சிகிச்சை முறை வெற்றி பெற்றால் உலக அளவில் தமிழர்களின் மருத்துவ முறைக்கு பெரும் புகழும், அங்கீகாரமும் கிடைக்கும்," என அன்புமணி ராமதாஸ் தமது அறிக்கை வழி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

