சிவகங்கை: கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் தங்க நாணயம் ஒன்றை நிபுணர்கள் கண்டெடுத்துள்ளனர்.
ஒரு சென்டிமீட்டர் அளவுள்ள அந்த நாணயம் சுமார் 300 மில்லி கிராம் எடை கொண்டது என்றும் கிபி 17ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
"தங்க நாணயத்தின் முன்பக்கத்தில் நாமம் போன்றும் நடுவில் சூரியனும் அதன் கீழே சிங்க உருவமும் காணப்படுகின்றன.
"அதன் பின்புறத்தில் 12 புள்ளிகளும் அதன் கீழ் இரண்டு கால் மற்றும் இரண்டு கைகளுடன் கூடிய உருவமும் உள்ளன," என்று ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இக்காசு வீரராயன் பணம் என்று பொதுவாக அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் ஆய்வாளர்கள், இதுபோன்று மேலும் பல பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், மணலூர், கொந்தகையில் 6ம் கட்ட அகழாய்வு நடந்து வருகின்றது. அகரம் பகுதியில்தான் தங்கக் காசு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கீழடி மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பண்பாட்டு மேடுகளை உள்ளடக்கிய கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் தமிழக அரசின் தொல்லியல் துறை விரிவான அகழாய்வு மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழர்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பதை விவரிக்கும் வகையில் பல்வேறு பொருட்கள் கிடைத்து வருகின்றன.

