சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் நேற்று முதல் இம்மாதம் 30ஆம் தேதி வரையிலான ஊரடங்கு உத்தரவு நடப்புக்கு வந்தது.
இந்த ஊரடங்கின்போது கட்டுப்பாடுகளை அலட்சியத்துடன் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை களை எடுக்கும் வகையில் சென்னையில் 20,000 போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சோதனைச் சாவடிப் பணிகள், சுற்றுக்காவல் பணிகள் உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மொத்தம் 288 இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து வாகனச் சோதனையில் ஈடுபட்டு வரும் போலிசார், கட்டுப்பாடுகளை மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
அத்துடன், தேவையின்றி வெளியில் சுற்றுபவா்களையும் கைது செய்து வருகின்றனா்.
சென்னையில் அண்ணா சாலை, கத்திப்பாரா பகுதிகளில் உள்ள மேம்பாலங்களும் காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கின்போது கட்டுப்பாடு களைப் பின்பற்றாமல் அதை உடைத்தெறிவதால்தான் கொரோனா கிருமிப் பரவல் ஒரு கட்டுக்குள் வராமல் சென்னையில் நாளும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில், சென்னை நகரம் இப்போது போலிஸ் கண் காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த ஊரடங்கின் போது சில அத்தியாவசியப் பணிகளுக்கு விதிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நேரத்தில் மருத்துவ மனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள் செயல்படவும் 'ஆம்புலன்ஸ்', அமரர் ஊர்தி சேவைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் வாகனங்கள், ஆட்டோ, டாக்சி போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்துள்ளனர்.
ஆனால், வாடகை ஆட்டோ, டாக்சி, தனியாா் வாகனங்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை.
பொதுமக்கள் பிற இடங்களுக்கு மோட்டார் சைக்கிள், கார்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களை வாங்க விரும்பும் மக்கள் தங்கள் பகுதிகளில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் கடைகளுக்கு நடந்துசென்று வாங்கிவர அனுமதி தந்துள்ளனர்.
காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் தனிநபா் இடைவெளியுடன் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு குறித்து சென்னை நகர போலிஸ் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியபோது, "பொதுமக்கள் அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்கிவர வேண்டும். கட்டுப்பாட்டை மீறி வாகனங்களில் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
"சென்னை நகர எல்லையைத் தாண்டி பணிக்குச் சென்றுவரும் ஊழியர்கள், இதுபோல் தினசரி சென்றுவர அனுமதி இல்லை. வேலை பார்க்கும் நிறுவனத்திலேயே அவர்கள் தங்கிக்கொள்ள வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.

