சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா கிருமித் தொற்றியோர் கண்டறியப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தற்போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் பிற மாவட்டங்களில் தொற்றுப் பரவல் எந்தளவு உள்ளது என்பதைத் தீவிரமாக கண்காணிக்கும்படி உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொற்றுப் பரவல் அதிகரிப்பது தெரியவந்தால் மேலும் ஒன்றிரண்டு மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் முதன்முறையாக அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கிருமி தொற்றியோர் கண்டறியப்பட்டுள்ளனர். கடலூரில் 63 பேர், தூத்துக்குடியில் 62, காஞ்சிபுரத்தில் 56, ராணிப்பேட்டையில் 52, திருச்சியில் 51 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் புதிதாக 2,710 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியிருப்பது உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 9 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு கொரோனா கிருமித் தொற்றுக்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

