தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் போலிஸ் பாதுகாப்பில் இருந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை எடுக்கும்படி முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த கைபேசி கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் போலிஸ் காவலில் இருந்தபோது இறந்தது தொடர்பாக செய்திகள் வெளியாகின.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் கைபேசி கடை வைத்துள்ளார். கடந்த 19ஆம் தேதி அவரை சீக்கிரமே கடை அடைக்கக்கோரிய போலிசார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சென்ற அவரது மகன் பென்னிசும் கைது செய்யப்பட்டதாக திரு ஜெயராஜின் மனைவி செல்வராணி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தந்தையும் மகனும் சிறையில் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் 22ஆம் தேதி இரவு பென்னிசும் நேற்று அதிகாலை அவரது தந்தை ஜெயராஜும் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டார். இந்நிலையில், அவர்களது உடற்கூறு ஆய்வைக் காணொளியில் பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக் கோரியிருந்தார் திருமதி செல்வராணி.
தந்தை, மகன் உடல்களை 3 மருத்துவர்கள் அடங்கிய குழு உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அதனை காணொளிப் பதிவாக்கி ஒப்படைக்க வேண்டும் என்றும் பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தின் தொடர்பில் உதவி ஆய்வாளர்கள் இருவர், இரண்டு போலிசார் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்து 4 வாரங்களில் பதிலளிக்க சிறைத்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையிலெடுத்து டிஜிபி, மாவட்ட எஸ்.பி. ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சூரியபிரகாசம் இந்த முறையீட்டைச் செய்தார்.
பதிவுத்துறைக்கு கடிதம் அளித்தால் நாளை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online