ஈரான் நாட்டில் உள்ள தமிழக மீனவர்களை தாயகத்துக்கு அழைத்து வர சிறப்பு கப்பல் ஒன்று அனுப்பப்படுவதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூன் 25) வெளியிட்ட செய்தியில், “தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 700 மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
“கொரோனா தொற்று காரணமாக அனைத்துலக அளவில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஈரானில் மீன்பிடி தொழில் மேற்கொண்டு வந்த தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
“இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை விரைவில் தமிழகம் அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள கடிதம் மூலம் தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
“இதனைத்தொடர்ந்து, இந்திய அதிகாரிகள் ஈரானில் தங்கியுள்ள மீனவர்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள், அத்தியாவசிய தேவைகள் மற்றும் பிற வசதிகள் கிடைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
இந்நிலையில், ஈரானில் இருக்கும் தமிழக மீனவர்களை தமிழகம் அழைத்துவர சிறப்பு கப்பல் இன்று (ஜூன் 25) புறப்படவுள்ளது. இக்கப்பல் மூலம் தமிழகத்தினை சேர்ந்த 673 மீனவர்கள் விரைவில் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைவார்கள்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online