சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் ஊரடங்கை மீறி தங்களது கைபேசி கடையை திறந்து வைத்திருந்ததாகக் கூறி, கடந்த 19ஆம் தேதி இரவு சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை காவல் துறையினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் தந்தையும் கடந்த 22ஆம் தேதி இரவு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இதையடுத்து இரண்டு நீதிபதிகள் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டதால் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா நேற்று முன்தினம் இரு வியாபாரிகளும் அடைத்து வைக்கப்பட்ட சிறையில் விசாரணை மேற்கொண்டார்.
இந்த விசாரணை இரவு எட்டரை மணி வரை தொடர்ந்தது. அதன் பின்னர் கோவில்பட்டி நீதிபதி பாரதிதாசன் தலைமையில் தட்டச்சு இயந்திரங்களுடன் பணியாளர்களும் சிறைக்குள் சென்று விசாரணை நடத்தினர்.
சிறையில் உள்ள கைதிகள், சிறைக்காவலர்கள், சிறை உதவி கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தனித்தனியாக நீதிபதிகள் விசாரணை நடத்தினர். சிறையில் உள்ள ஆவணங்கள், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆகியவற்றையும் நீதிபதிகள் நேரில் பார்வையிட்டனர். மேலும் சாத்தான் குளம் காவல் நிலையத்தித்திலும் மாவட்ட நீதிபதி பாரதிதாசன் விசாரணையைத் தொடங்கினார்.
முன்னதாக மாவட்ட முதன்மை நீதிபதி லோகேசுவரன் நேற்று முன்தினம் சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீட்டுக்குச் சென்றார். அங்கு அவர்களது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் ‘லாக்-அப்’ மரணம் கிடையாது என்றும் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்தால் மட்டுமே ‘லாக்-அப் டெத்’ என்று பெயர் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருப்பதாக உள்ளூர் ஊடகம் ஒன்று குறிப்பிட்டது.
மற்றொரு நிலவரத்தில் நடிகர் சூர்யா, சாத்தான் குளம் சம்பவத்தில் குற்றம் இழைத்தவர்களும் அதற்கு துணைபோனவர்களும் விரைவாக தண்டிக்கப்பட்டு நீதி நிலைநிறுத்தப் படும் என்ற நம்பிக்கையோடு பொது மக்களில் ஒருவனாக தாமும் காத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், மரணமுடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்ததாக கராத்தே தியாகராஜன் கூறினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சாத்தான் குளத்தில் நிகழ்ந்திருக்கும் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரின் மரணமும் அதனைச் சுற்றி நிகழ்ந்திருக்கும் மனித உரிமை மீறல்களும், சட்ட மீறல்களும் நம்மில் எவருக்கு வேண்டுமானாலும் நிகழக்கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளார். “நிதியைவிட நீதிதான் அவர்களது குடும்பத்துக்கு தேவை,” என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். திமுக தலைமையோ இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்து உள்ளது.