தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் என்ற இருவரும் போலிஸ் நிலையத்தில் அடித்து கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் பொதுமக்களிடம் நேரடியாக விசாரணை நடத்த சிபிசிஐடி போலிசார் திட்டமிட்டுள்ளனர்.
தந்தை, மகன் இருவரும் தாக்கப்பட்ட விவகாரத்தைக் கொலை வழக்காக போலிசார் மாற்றி இருக்கிறார்கள். இதன் தொடர்பில் மொத்தம் ஐந்து போலிஸ் அதிகாரிகள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அந்த ஐவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலிசார் முடிவு செய்து இருக்கிறார்கள். இதோடு ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கைது செய்யப்பட்டதை நேரில் பார்த்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தவும் போலிசார் திட்டமிடுகிறார்கள்.
கொலையுண்ட வியாபாரிகளின் உறவினர்கள், பொதுமக்கள், கடைக்காரர்கள் பலருக்கும் குறுஞ்செய்தி மூலம் அழைப்பு விடுத்து இந்த விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ‘பிரண்ட்ஸ் ஆஃப் போலிஸ்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களையும் அதிகாரிகள் விசாரிக்கிறார்கள்.
இந்நிலையில், கடைசியாக கைது செய்யப்பட்ட முத்துராஜ் என்பவர் ஏற்கெனவே அரசினர் சாட்சியாக மாறிவிட்டார் என்று வெளியான தகவல்களை சிபிசிஐடி அதிகாரிகள் மறுத்தனர்.
முத்துராஜை முன்னதாகவே தாங்கள் பிடித்து வைத்திருந்ததாகக் கூறப்படுவதையும் அவர்கள் மறுத்தனர்.
இவ்வேளையில், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பில் ஸ்ரீதர் என்ற போலிஸ்காரரை சிபிசிஐடி போலிசார் கைது செய்தபோது, ஸ்ரீதர் அதிமுக அமைச்சர் ஒருவருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவர் மீது கைவைக்க வேண்டாம் என்று சிபிசிஐடி போலிசாருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின.
அந்த அமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கடம்பூர் ராஜூ என்றும் பேச்சு அடிபட்டது.
ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துவிட்ட கடம்பூர் ராஜூ, சாத்தான்குளம் வழக்கில் கைதான போலிஸ்காரர் ஸ்ரீதருக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையே, சாத்தான்குளம் கொலை விவகாரம் பரபரப்பாக வெளியானபோது திடீரென விடுப்பில் சென்ற வினிலா என்ற அரசு மருத்துவர், இப்போது மீண்டும் ஒரு மாதம் விடுப்பில் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிபிசிஐடி போலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் திடீரென அந்த மருத்துவர் விடுப்பில் போய்விட்டார். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்து சென்ற மாதம் 20ஆம் தேதி ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி போலிஸ் நிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அப்போது அந்த இருவரின் உடலிலும் அதிக ரத்தக் கசிவு ஏற்பட்டு இருந்தது. என்றாலும் அந்த இருவரையும் கோவில்பட்டிக்கு அழைத்துச் செல்லும் அளவிற்கு அவர்களின் உடல்நலம் நன்றாக இருக்கிறது என்று கூறி மருத்துவர் வினிலா தகுதிச் சான்றிதழ் அளித்தார் என்பது தெரியவந்தது.
கைதான போலிஸ் அதிகாரிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றார் அமைச்சர் ராஜூ