இக்கோயில் யானை அணிந்திருப்பது பாரம்பரிய வைணவ நாமம். ஆனால் அதற்கு மேலே இருக்கும் தலைமுடியோ நவீனம்.
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்தபெற்ற மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி கோயிலைச் சேர்ந்த செங்கமலம் என்ற இந்தப் பெண் யானை, இந்த 'பாப்-கட்' முடியால் தற்போது சமூக ஊடக நட்சத்திரமாக மாறி வருகிறது.
2003ஆம் ஆண்டில் கேரளாவிலிருந்து இக்கோயிலுக்கு கொண்டுவரப்பட்ட செங்கமலத்தின் முடியை அதன் பாகன் எஸ். ராஜகோபால் பராமரித்து வருவதாக 'மன்னை ஆன்லைன்' செய்தித்தளம் குறிப்பிடுகிறது.
இந்த யானையின் படங்களை இந்திய வனத்துறைச் சேவை அதிகாரி சுதா ராமன் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அவரது பதிவு 10,000 க்கு மேற்பட்ட லைக்குகளை ஈர்த்து வருகிறது.