சென்னை: தமிழகம் எங்கும் கொவிட்-19 உயிர்க்கொல்லி கிருமித்தொற்றால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை நாளும் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தப் பாதிப்பு சென்னை மாநகரில் வழக்கத்தை விடவும் சற்றே மட்டுப்பட்டுள்ளதால் மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது தினமும் 4,000க்கும் மேற்பட்டோருக்கு கிருமி பரவி வருகிறது.
தலைநகரான சென்னையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தினமும் 2,000 பேருக்கு மேலான நோயாளிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதன் காரணமாக சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 68,000ஐ தொட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக நேற்று 1,713 பேருக்கு மட்டுமே இத்தொற்று இருப்பது உறுதியானது. இது வழக்கமான எண்ணிக்கையை விட மிகவும் குறைவாகும். அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,000 பேருக்கு மேல் குணம் பெற்று இல்லம் திரும்பினர்.
இந்நிலையில், ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
“கொவிட் -19 கிருமித்தொற்றின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுஊரடங்கு அமலில் உள்ளது. அதேபோல் மதுரையில் அறிவிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கும் மேலும் 7 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது தற்கா லிக வெற்றிதான். பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதாகச் சொல்வதை விடவும் அதை தடுக்கும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
“மதுரை, கடலூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் பரிசோதனை கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு முறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்,” என ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.