கீழடியில் நடைபெறும் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் வியப்பூட்டும் விதமாக இரண்டு மனித எலும்புக்கூட்டுப் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தப் படிமங்கள் குழந்தைகளினுடையதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த இரு எலும்புக்கூடுகளும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வுக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கீழடி கிராமத்தில் செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல அங்கு கண்டுபிடிக்கப்பட்டன. இது முழுக்க முழுக்க தமிழர் நாகரிகம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இதுவரை அந்தப் பகுதியில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் மொத்தம் மூன்று எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன.
அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு எலும்புக்கூட்டுப் படிமங்களில் ஒன்று 95 செமீ நீளமானது.
மற்றொரு எலும்புக்கூட்டின் நீளம் 75 செமீ .
இந்த இரண்டு எலும்புக்கூடுகளுக்குச் சொந்த மான உடல்கள் அருகருகே புதைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு எலும்புக்கூடுகளில் கபாலம் இயல்பான அளவைவிடப் பெரியதாக உள்ளது. நெடுங்காலமாகப் புதைக்கப்பட்டிருப்பதால் கபாலம் பெரிதாக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால், இதன் தொடர்பிலான ஆய்வுகள் தொடர்கின்றன.
இதன் வயது, பாலினம், அவை எவ்வளவு ஆண்டுகளுக்கு முந்தியவை என்பது தொடர்பான தகவல்கள் ஆய்வில் தெரியவரும்.
இந்தப் படிமங்கள் கிமு 6ம் நூற்றாண்டு உடலாகக்கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கீழடி ஆராய்ச்சியில் இது மிக முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.
இந்திய வரலாற்றையே மாற்றி எழுதும் அளவிற்கு கீழடியில் கிடைத்த பொருட்களின் வயது 2600 வருடங்களுக்கு முந்தியது என்று கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.