தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று முன்தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 5 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
தற்போது அமைச்சர் தங்கமணிக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழக முதல்வருக்கும் அண்மைய சந்திப்பில் அவர்களுடன் இருந்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உட்பட மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும், அமைச்சர் கே.பி அன்பழகன் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருப்பதால் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கும் கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.