சென்னை: தமிழகம் முழுவதும் தமிழக அரசின் உத்தரவின்படி, இன்று எந்த ஒரு தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது.
கொரோனா கிருமிப் பரவலை முறியடிக்கும் வகையில் தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
எனினும், மாநிலம் எங்கும் இம்மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு நடப்பில் இருக்கும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது.
இதையடுத்து காய்கறி, மளிகை, இறைச்சி உள்ளிட்ட கடைகள் எதுவும் இன்று திறக்கப்படாது.
உணவகங்கள், தேநீர் கடைகளும் செயல்படாது. பொதுப் போக்குவரத்துகள் எதுவும் அனுமதிக்கப்படாது. மருந்துக்கடைகள், மருத்துவமனைகள் இன்று வழக்கம்போல செயல்படும். பால் விநியோகத்திற்கு அனுமதி உண்டு.
இந்நிலையில், எந்த ஓர் அவசியத் தேவையும் இன்றி பொதுமக்கள் வீணாக வெளியே வரவேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, கடந்த சில மாதங்களாகவே ஊரடங்கு உத்தரவின் காரணமாக தொழில்நுட்ப நிறுவனங்கள் திறக்கப்படாததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே, இந்த நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வலுத்தன.
இதையடுத்து, சென்னையில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10% ஊழியர்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு நேற்று முன்தினம் அனுமதி அளித்தது.
இருப்பினும் பல நிறுவனங்களும் ஊழியர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்ததை அடுத்து, தமிழக அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், சென்னை, சென்னையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் நாளை 13ஆம் தேதி முதல் இயங்க லாம் என்று தெரிவித்துள்ளது.