சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு இதயத் துடிப்பறியும் கருவியை அதிக அளவில் பயன்படுத்தும்படி தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் பணிகள் கொரோனா தொற்றின் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை பெருமளவில் குறைக்க உதவும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளின் ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
"ஏனெனில் அவர்களின் ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் குறையும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்புள்ளது.
"இதனைத் தவிர்க்கும் வகையில் நோயாளிகளின் ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவைக் கணக்கிட ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் (Finger Pulse Oximeter) என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.
"கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவை வெகு எளிதாக அளவிட ஏதுவாக இக்கருவியை அதிக அளவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும்படி தமிழக முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, 43,000 பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவிகளைக் தொள்முதல் செய்ய ஆணை வெளியிடப்பட்டு, இதுவரை 23,000 கருவிகள் தருவிக்கப்பட்டுள்ளன.
"மீதமுள்ள கருவிகள் ஓரிரு நாட்களில் பெறப்படும். தேவையின் அடிப்படையில் இக்கருவிகள் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும்," என்று கூறியுள்ளார்.

