பண்ருட்டி: பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பெயரில் போலி வங்கிக் கிளை நடத்தியதாக மூன்று பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சையது கலீல் மற்றும் லட்சுமி. முன்னாள் வங்கி ஊழியர்களான அவர்களுக்கு கமால் பாபு, 19, என்ற மகன் உள்ளார். கலீல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார்.
ஈராண்டுகளுக்கு முன்னர் வங்கி பணியில் இருந்து லட்சுமி ஓய்வு பெற்றார். வேலையில்லாமல் இருந்த கமால் பாபு, ‘பாரத ஸ்டேட் வங்கி - நார்த் பஜார்’ என்ற பெயரில் போலி வங்கிக் கிளையைத் தொடங்கி அதனை தமது வீட்டிலேயே நடத்தி வந்துள்ளார்.
அந்த வங்கிக்கு தானே மேலாளர் எனவும் கூறிவந்துள்ளார். இருப்பினும் வங்கி என அறிவிக்கக்கூடிய பெயர்ப் பலகை எதையும் அவர் வைக்கவில்லை. ஏற்கெனவே, அப்பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் இரண்டு கிளைகள் இருந்ததை அடுத்து மூன்றாவதாக கிளை திறக்கப்பட்டுள்ளதா என வாடிக்கையாளர் ஒருவர் அந்த வங்கியின் கிளை மேலாளர் வெங்கடேசனிடம் வினவியுள்ளார். அதனை அடுத்து, காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்த கிளை மேலாளர் வெங்கடேசன், கமால் பாபு நடத்திய வங்கிக் கிளைக்குச் சென்றுள்ளார்.
அப்போது, பாரத ஸ்டேட் வங்கியின் பெயரிலேயே போலியாக சலான், காசோலை, முத்திரைகள், ஆவணங்கள் உள்ளிட்டவை அங்கு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் அவர். மேலும், ‘பாரத ஸ்டேட் வங்கி-நார்த் பஜார்’ என்ற பெயரில் போலி இணையத்தளம் உருவாக்கப்பட்டிருப்பதும் அவருக்குத் தெரியவந்துள்ளது. அதனை அடுத்து, கமால் பாபு, அவருக்கு உதவிய ‘ஈஸ்வரி ரப்பர் ஸ்டாம்ப்’ நிறுவன உரிமையாளர் மாணிக்கம், 52, அருணா பிரிண்டர்ஸ் உரிமையாளர் குமார், 42, ஆகியோரை போலிசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீது மோசடி, கள்ள முத்திரை உருவாக்குதல், நற்பெயருக்கு தீங்கு விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பண்ருட்டி காவலர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சுமார் 3 மாத காலம் அந்த வங்கிக் கிளையை செயல்படுத்தியதாக தெரியவந்துள்ளது. மேலும் தமது பெற்றோரைப் போலவே வங்கியில் வேலை செய்ய வேண்டும் என்ற தமது நீண்ட நாள் கனவு நிறைவேறாததால் சொந்தமாக வங்கிக் கிளை தொடங்கியதாக போலிஸ் விசாரணையில் கமால் பாபு தெரிவித்தார்.