துடியலூர்: ஐந்து போலிஸ்காரர்களுக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் வேலை செய்யும் போலிஸ் நிலையம் மூடப்பட்டது.
கோவை மாவட்டக் காவல்துறைக்கு உட்பட்ட துடியலூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 45க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
துடியலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உட்பட 35 போலிசாருக்கு கடந்த வாரம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று (ஜூலை 12) வெளியாயின.
44 வயதான ஒரு ஆண் தலைமைக் காவலர், 30 வயதுக்குட்பட்ட ஒரு பெண் காவலர், 3 ஆண் காவலர்கள் என ஐந்து பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தொற்று உறுதி செய்யப்பட்ட ஐந்து காவலர்களையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், காவலர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, துடியலூர் காவல் நிலையம் தற்காலிகமாக நேற்றுக் காலை மூடப்பட்டது. இதற்குப் பதிலாக, அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு துடியலூர் காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டது. அடுத்த சில நாட்களுக்கு துடியலூர் காவல் நிலையம், மேற்கண்ட திருமண மண்டபத்தில் தற்காலிகமாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையினர் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதியைத் தனிமைப்படுத்தி, அந்த இடங்கள் மற்றும் துடியலூர் காவல் நிலையத்தில் கிருமிநாசினி தெளித்தனர்.