மதுரை: பதைபதைப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் முதலில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்து ராஜ் ஆகிய ஐவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.
அந்த மனு மீது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது.
காவலில் வைத்து விசாரிக்க ஐந்து நாட்களுக்கு அனுமதி கோரிய நிலையில், 3 நாட்களுக்கு சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு ஐவரும் சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து, அவர்கள் அனைவரிடமும் மதுரையில் உள்ள தனது அலுவலகத்தில் சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மூன்று நாள் காவல் முடிந்து ஜூலை 16ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு மீண்டும் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல காவலில் இருக்கும்போது ரகு கணேஷும் ஸ்ரீதரும் தினமும் 1 மணி நேரம் தங்களது வழக்கறிஞரைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஐவருடன் போலிசார் சென்ற வாகனம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நேர்ந்ததன் மர்மம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக ஊடகச் செய்திகள் தெரி வித்தன.