கொரோனா கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக முகக்கவசம் அணிவதற்கு வலியுறுத்தப்பட்டாலும் பலர் அதனை அலங்காரமாக அணிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.
சூரத்தில் அண்மையில் மணமக்களுக்காக வைரங்கள் பதித்த முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் ராதாகிருஷ்ணன் தங்கம், வெள்ளியில் எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் முகக்கவசங்களைத் தயாரித்து வருகின்றார்.
தங்கம் மற்றும் வெள்ளியை 0.06 மி.மீட்டர் தடிமனில் மெல்லிய இழையாக மாற்றி முகக்கவசம் செய்து வருகிறார் அவர்.
மெல்லிய நூல் போன்ற கம்பியால் தயாரிக்கப்படுவதால் துணி முகக்கவசம் போல பயன்படுத்த வசதியாக இருக்கும் என்கிறார் திரு ராதாகிருஷ்ணன்.
அலங்காரமாக முகக்கவசம் அணிய விரும்பும் பலர் இந்த முகக்கவசத்தை நாடுவதாக அவர் கூறினார். தங்கத்தில் தயாரிக்கப்படும் முகக்கவசத்தின் விலை ரூ.3 லட்சம் வரை இருக்கும் எனவும், வெள்ளியில் தயாரிக்கப்படும் முகக்கவசத்தின் விலை ரூ.15 ஆயிரம் வரை இருக்கும் எனவும் திரு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.