கரூர்-திருச்சி சாலையில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று படுவேகத்தில் தாறுமாறாக ஓடியது. அதனைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.
கட்டுப்பாட்டை இழந்து ஓடிய ஆம்புலன்ஸ், பி.வெள்ளாளப்பட்டி என்னும் ஊர் அருகே சாலை ஓரமாக இருந்த ஒரு குடிசை வீட்டுக்குள் புகுந்தது.
கூரை வீட்டை உடைத்துக்கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த கம்புகள் மேல் சென்று அந்தரத்தில் நின்றது.
வீட்டுக்குள் யாரும் இல்லாததால் அங்கு வசித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
பொதுமக்கள் ஆம்புலன்ஸ் வாகனத்திற்குள் சிக்கியிருந்த இரு இளையர்களை மீட்டனர்.
தகவலின் பேரில் விரைந்து சென்ற பசுபதிபாளையம் போலிசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
மீட்கப்பட்டவர்களின் பெயர் ஹரிஷ், ராகவன் என்றும் தலைக்கேறிய போதையில் அவர்கள் இருந்ததும் தெரியவந்தது.