தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கல்விளை கிராமத்தில் 8 வயது சிறுமி முத்து சரண்யா கொல்லப்பட்ட சம்பவத்தில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்று தெரியவந்துள்ளது.
அந்த ஊரில் உள்ள ஓடையில் தண்ணீர் நிரப்பும் டிரம் ஒன்றுக்குள் சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுமியின் கழுத்து, உதடுகளில் காயம் இருந்தது.
தகவலறிந்த போலிசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர்.
சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படவில்லை என உடற்கூறு ஆய்வு தெரிவித்தது.
கொலையின் தொடர்பில் அதே ஊரைச் சேர்ந்த 19 வயது இளையர்களான முத்தீஸ்வரன், நித்தீஸ்வரன் ஆகியோரை போலிசார் கைது செய்துள்ளனர்.
சிறுமி சரண்யா, தம் தாயார் உச்சிமாகாளி வேலைக்குச் சென்ற பிறகு, வழக்கம்போல பக்கத்து வீட்டுக்கு தொலைக்காட்சி பார்க்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது அந்த வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் நடந்துகொண்டிருந்ததாகவும், அந்தச் சமயத்தில் சிறுமி தொலைக்காட்சி போடும்படி கேட்டதால் ஆத்திரமடைந்த மகன், சிறுமியின் கழுத்தை நெரித்ததாக ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மயங்கிச் சரிந்த சிறுமியை தண்ணீர் டிரம்முக்குள் போட்டு, தம் நண்பனின் உதவியுடன் சந்தேக நபர் சுமார் 2 கி.மீ. தொலைவில் இருந்த ஓடைக்குள் போட்டதாகவும் கூறப்படுகிறது.
சிறுமியின் தந்தை அந்தக் குடும்பத்தைக் கைவிட்டதாகவும் தாயார் மட்டுமே வேலைக்குச் சென்று வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கூறி உறவினர்கள் உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு சிறுமியின் உடலை வாங்க மறுத்தனர்.
இந்நிலையில், முதற்கட்ட மாக ரூபாய் 4.28 லட்சம், சிறுமியின் தாயார் உச்சிமாகாளிக்கு வீட்டுமனை பட்டா, சிறுமியின் சகோதரனுக்குத் தேவையான படிப்புச் செலவு ஆகியவை அரசு சார்பில் வழங்க பரிந்துரைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.