கொரோனா கிருமிப் பாதிப்பில் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்துவிட்டனர்.
ஒரே நாளில் ஆக அதிகமானோர் கிருமித்தொற்றால் மாண்டிருப்பது இதுவே முதல்முறை என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மாண்டோரில் 64 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 24 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். மேலும் உயிரிழந்தவர்களில் 31 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
ஒரே நாளில் 4,807 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதும் முதல் சம்பவம் என்றது அதன் அறிக்கை. ஆக அதிகமாக சென்னையில் 1,219 பேருக்கு தொற்று உறுதியானது.
புதிதாக கிருமி தொற்றியவர்களையும் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 165,714 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,403 ஆகவும் அதிகரித்துவிட்டன.
பாதிப்புகளின் எண்ணிக்கை இவ்வாறு இருந்தாலும் குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
சனிக்கிழமை மட்டும் 3,049 பேர் கிருமித்தொற்றில் இருந்து மீண்டனர். இவர்களையும் சேர்த்து குணமடைந்தோர் எண்ணிக்கை 113,856க்கு உயர்ந்தது.
தமிழகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 673 பேர் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் வந்தவர்கள் என்று சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.