சென்னை: இந்திய அளவில் கொரோனா கிருமிப் பரவலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழகத்தில் மக்களுடன் நெருங்கிப் பழகும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கிருமித்தொற்றால் அவதிப்படுவது அதிகரித்து வருகிறது.
கொரோனா நோயாளிகளை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொண்ட விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு அதே கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த அதிர்ச்சி நீடிக்கும் வேளையில் திமுகவைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்களுக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கிருஷ்ணகிரி திமுக சட்டமன்ற உறுப்பினர் (எம்எல்ஏ)செங்குட்டுவனுக்கு கடந்த சில நாட்களாக லேசான சளி காய்ச்சல், இருமல் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செங்குட்டுவன் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல கடலூர் மாவட்டம் திட்டக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் கணேசனுக்கும் சனிக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், வேலூர் மாவட்ட திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அவர் உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.
அடுத்தடுத்து மூன்று எம்எல்ஏக்களுக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டதால் திமுகவினர் கவலையடைந்தனர்.
தமிழகத்தில் ஏற்கெனவே கிருமி தொற்றிய எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 14ஆக இருந்த நிலையில் நேற்று கார்த்திகேயனைச் சேர்த்து 15 ஆனது. அவர்களில் தமிழக அமைச்சர்களும் அடங்குவர்.
இருப்பினும் செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான் உள்ளிட்ட சில எம்எம்ஏக்கள் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
தமிழக நிலைமையை
கேட்டறிந்தார் பிரதமர்
தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 714 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,403 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இந்நிலையில், தமிழகத்தில் கிருமிப் பரவல் தடுப்புப் பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 48 ஆயிரம் கொரோனா கிருமி பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக அப்போது பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
மேலும் கிருமிப் பரவலைத் தடுக்க தமிழக அரசு முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் இயல்புநிலை திரும்ப அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருவதாகவும் பழனிசாமி உறுதி கூறியதாகவும் தமிழக அரசின் அறிக்கை கூறியது.

