மதுரை: கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகரில் ஆரப்பாளையம் பகுதியில் 50 ஆண்டுகள் பழமையான ‘சுப்பு கடை’ உணவக உரிமையாளர் புதிய முயற்சியைக் கையாண்டு வருகிறார். இந்தக் கடையில் ‘கிரில் சிக்கன்’ மற்றும் பிரியாணி வாங்குபவர்களுக்கு கிருமிநாசினி மற்றும் முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
மேலும், இரண்டு பரோட்டா வாங்கினால் ஒரு முகக்கவசம் இலவசமாக வழங்கப்படுகிறது. முகக்கவசங்கள் மற்றும் கிருமி
நாசினி திரவம் இலவசமாக வழங்கப்படும் நிலையில், உணவுகளின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடை வாசலில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக கபசுரக்குடிநீரும் வழங்கப்படுகிறது.
காட்டுத்தீயாய் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்தும் சுப்பு கடை உரிமையாளரின் முயற்சி வாடிக்கையாளர்களிடம் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.