சென்னை: தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் ரூ.10,399 கோடி முதலீடு செய்ய உள்ளன. இதன்மூலம் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் எட்டு தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாகவும், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தானதாகவும் அரசு செய்திக்குறிப்பு மேலும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் தொலைநோக்குப் பார்வையுடன் முதல்வர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ள அரசு, மாநிலத்தில் நிலவும் சிறப்பான தொழில் சூழலின் விளைவாக தொடர்ந்து பல புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் தேசிய அளவில் அதிகமான முதலீடுகளை ஈர்த்ததன் மூலம், மகாராஷ்டிரா மாநிலத்தை தமிழகம் பின்னுக்குத் தள்ளி இருப்பதாகவும், தற்போது தமிழகம் முதலீடுகளை ஈர்ப்பதில் முதலிடத்திற்கு முன்னேறி இருப்பதாகவும் அரசு செய்திக்குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் விக்ரம் சோலார் நிறுவனம் ரூ.5,423 கோடி செலவில் 7,542 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒரு தொழிற்சாலையை நிறுவ உள்ளது. வாலாஜாபாத்தில் 250 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 1,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்பூங்கா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கோவையில் 200 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 400 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 2,500 வேலை வாய்ப்புகளுடன் ஹீரா நந்தானி குழுமம் தகவல் தரவு மையம் ஒன்ற அமைக்க உள்ளது.
இதேபோல், ராணிப்பேட்டையிலும் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்திலும் சில நிறுவனங்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்கின்றன என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் எட்டு புதிய திட்டங்களின் மூலம் 10,399 கோடி ரூபாய் முதலீடுகள் குவிவதுடன் சுமார் 13,507 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிட்டும்.
கடந்த 4 மாதங்களில் 25 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததால் தமிழகத்தில் ரூ.25,527 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.

