மதுரை: கொரோனா கிருமித் தொற்றை துடைத்தொழிக்க இன்னும் மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள சூழ்நிலையில், உயிர் காக்கும் கவசமாக முகக்கவசத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த முகக்கவசம் இல்லாமல் ஏழை எளிய மக்கள் பலரும் சிர மப்பட்டு வருவதைக் களையும் விதத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசம் நாளை முதல் வழங்கப்பட உள்ளதாக தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்ட அமைச்சர், செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்குவதை தமிழக முதல்வர் நாளை தொடங்கி வைக்க உள்ளார். கொரோனா தொற்று பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதற்காகவே கொரோனா பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
“கொரோனா தொற்று பாதிப்புக்கான தடுப்பு மருந்துகள் கிடைக்கும்வரை, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். தேவை இருந்தால் மட்டுமே முகக்கவசம் அணிந்து வெளியே செல்லவேண்டும்,” என்றார்.