திருச்சி: திருச்சியில் மது அருந்திய இருவர் கட்டிப்புரண்டு சண்டை போட்டுக்கொண்டு இருந்தனர்.அவர்களைப் பிரித்துவிட்டு சமாதானம் செய்யச் சென்ற பெண் ஒருவர் பலியானார்.
மாரிமுத்து, தங்கபாண்டி ஆகிய இருவரும் திருச்சி மாவட்டம், தில்லைநகர், தூக்குமேடை தெருவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மதுபோதையில் நேற்று முன்தினம் இரவு அடித்து மோதிக்கொண்டு இருந்துள்ளனர்.
50 ரூபாய்க்காக அவர்கள் சண்டை போட்டுக் கொள்வதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் இருவரையும் விலக்கிவிட தங்கபாண்டியின் உறவினர் களான சுரேஷ், அஞ்சலி, முத்துலட்சுமி ஆகியோர் பெரும்பாடு பட்டுள்ளனர்.
இந்நிலையில், குடிகாரர்கள் இருவரும் சேர்ந்து முத்து லட்சுமியைத் தள்ளிவிட்டனர். இதில் கீழே விழுந்த முத்து லட்சுமியின் தலையில் பலத்த அடிபட்டுள்ளது. இதனால் காதிலும் மூக்கிலும் ரத்தம் வழிந்துள்ளது. இதையடுத்து அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

