சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித் தாக்கத்தால் விளையும் பாதிப்புகள் ஒரு முடிவுக்கு வரும் வரை, பள்ளிக்கூடங்களைத் திறப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறுகையில், "அடுத்த மாதம் அல்லது செப்டம்பர் மாதம் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக மத்திய அரசு எங்களுக்கு அறிவுரை கூறி கடிதம் எழுதி உள்ளது. இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம்.
"எனினும், இப்போதைக்கு பள்ளிகளைத் திறக்கும் எண்ணம் இல்லை. மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையைப் பொறுத்தே முடிவு எடுக்கப்படும். கொரோனா பாதிப்புகள் இருக்கும்வரை பள்ளிகளைத் திறக்கமுடியாது.
"சரியான நேரத்தில் முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும். 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பட்டியல் அடுத்த மாதம் வழங்கப்படும்," என்று கூறினார்.
கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி மையங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரித் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
அண்மையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல் கல்லூரி மாணவர்கள் முதலாம், இரண்டாம் ஆண்டு 'செமஸ்டர்' தேர்வு இன்றி அடுத்த ஆண்டுக்குச் செல்வதற்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதற்கிடையே, வரும் ஆகஸ்ட் 3ல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என வெளி யான தகவல் தவறானது என்றும் மாணவர் சேர்க்கை தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
மாணவர் சேர்க்கை தொடர்பாக நோட்டீஸ் ஒட்டியுள்ள பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
பள்ளிகளைத் திறக்கும் திட்டம் எதுவும் இல்லை. மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையைப் பொறுத்தே முடிவுகள் எடுக்கப்படும். கொரோனா பாதிப்பு சரியான பிறகே பள்ளிகள் திறக்கப்படும்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன்

