திருப்பெரும்புதூர்: கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபோல் அனுமதிக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் தங்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என்று கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம், மாங்காட்டை அடுத்த சிக்கராயபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவ மனையில் தங்கியிருந்தவர்கள் உணவு சரியான முறையில் வழங் கப்படுவது இல்லை, கழிவறை வசதிகள் இல்லை, குப்பைகளைச் சரிவர அகற்றுவதில்லை, குழாய்களில் தண்ணீர் வருவதில்லை, முறையாக மருந்துகள் வழங்கப்படுவதில்லை என்று போராட்டம் நடத்தியபோது அடுக்கடுக்காக குற்றம்சாட்டினர்.
"எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத தனியார் மருத்துவ மனையின் கொரோனா வார்டில் நாங்கள் தங்கமாட்டோம்," என்று கூறி வெளியே வந்தவர்கள், பூந்தமல்லி, குன்றத்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
எனினும் அவர்கள் தனிமனித இடைவெளியை முறைப்படி கடைப் பிடித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளின் போராட்டத்தைக் கண்டு அதிர்ந்த அப்பகுதி மக்கள், காவல்துறையினர், வருவாய்த்துறையினருக்கு தகவல் கூறினர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி உதவி ஆணையர் செம்பேடுபாபு, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டார்.
இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் கொரோனா வார்டில் தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு நோயாளிகள் கொரோனா வார்டுக்கு திரும்பிச் சென்றனர்.

