தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதனால் ஆளுநர் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் உள்ள பாதுகாப்பு வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 84 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் நால்வருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
கிண்டி சர்தார் படேல் சாலையில் பல 100ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
இந்நிலையில் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 147 பேருக்கு கொரோனா தொற்றுப் பரிசோதனை அண்மையில் நடத்தப்பட்டதில் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சுகாதாரத் துறையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் யாரும் ஆளுநர் அல்லது ராஜ் பவனின் மூத்த அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் நேரடி தொடர்பில் இருந்த உதவியாளர் தாமஸூக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
மேலும் மக்கள் தொடர்பு அதிகாரிகள் இருவர் உள்பட மொத்தம் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆளுநர் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


