சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கத்தால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக் கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை சாலி கிராமத்தில் உள்ள ஜவகர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ முகாமை நாடி தினமும் ஏராளமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த மருத்துவ முகாம் குறித்து சித்த மருத்துவர் கே.வீரபாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், "இங்கு காய்ச்சலுக்கு மட்டும் 'பார சிட்டமால்' ஆங்கில மருந்து பயன்படுத்தப்படுகிறது. அதை தவிர்த்து கபசுர குடிநீர், சிறப்பு மூலிகைத் தேநீர், நோயாளியின் தன்மைக்கேற்ப ஏனைய சித்த மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட இதர நோய்கள் உள்ளவர்களும் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,425 நோயாளிகளில் 1,963 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்," என்று கூறினார்.

