சென்னை: தமிழகத்தில் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியவில்லை.
இந்த நிலையில், ஆகஸ்ட் 3 முதல் மாணவர்களுக்கு இணையத்தில் பாட போதனையைத் தொடங்கும்படி பல்கலைக்கழகங்களுக்கு மாநிலத்தின் உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அடுத்த பள்ளிப்பருவத்திற்குக் கட்டாயமான பாடங்கள் மாணவர்களுக்குப் போதிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்படி இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குப் பாட போதனை தொடங்கும் என்று அதிகாரிகள் கூறினர்.
ஒரு பருவத்தை முடிக்க கல்லூரிகள் குறைந்தபட்சம் 90 நாட்கள் அல்லது 450 மணி நேர வகுப்புகளை நடத்த வேண்டும். இப்போதைய கொவிட்-19 சூழலில் 90 நாட்கள் என்பது இயலாத காரியம். ஆகையால் இணையம் வழி 450 மணி நேர வகுப்புகளை நடத்த திட்டமிடப்படுவதாக உயர் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
கல்லூரி மற்றும் பள்ளிக்கூட மாணவர்களுக்கு இணையம் வழி கல்வி போதிப்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்று நடந்து வருகிறது.
அந்த விசாரணையில் முன்னிலையான அரசு தரப்பு, இணையக் கல்வி தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளைத் தாக்கல் செய்ய தனக்குக் கால அவகாசம் தேவை என்று கோரியது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழிகாட்டி நெறிமுறைகளை ஆகஸ்டு 3ஆம் தேதி அன்று தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

