கோவை: இலங்கையின் மகா ரவுடி என்று குறிப்பிடப்படும் அங்கொட லொக்கா கொல்லப்பட்டு உடல் எரியூட்டப்பட்டதன் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அந்த மூவரிடம் பல கோணங்களிலும் விசாரணை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கையின் அதிபயங்கர ரவுடியான அங்கொட லொக்கா, 2017ல் தன்னுடைய விரோதிக் கும்பலைச் சேர்ந்த ஏழு பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு இந்தியாவுக்குத் தப்பி வந்துவிட்டார்.
சென்னையில் போலிசில் தஞ்சமடைந்த அவருக்குப் பிணை அனுமதிக்கப்பட்டது. பிணையில் இருந்தபோது அங்கொட லொக்கா பெங்களூருக்குத் தப்பி ஓடிவிட்டார். அங்கு அவர் நஞ்சு கொடுத்து கொல்லப்பட்டார்.
அவரின் உடல் பல பாதுகாப்புகளையும் கடந்து கோவைக்கு கொண்டுவரப்பட்டு பிறகு மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது. இதன் தொடர்பில் பெங்களூரு, சென்னை, கோவை நகரில் உள்ள போலிஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையின் விளைவாக அங்கொட லொக்காவின் கள்ளக்காதலியான அமானி தான்ஜி என்பவரும் சிவகாமசுந்தரி என்ற மாதும் ஈரோடு தியானேஸ்வரம் என்பவரும் போலிசாரிடம் சிக்கி இருக்கிறார்கள்.
அவர்களை விசாரித்தபோது பல நிலவரங்கள் தெரியவந்தன.
இலங்கையில் அங்கொட லொக்கா படுகொலை செய்த ஒருவரின் மனைவிதான் அமானி தான்ஜி என்பதும் அவர் தன்னுடைய கணவரைக் கொன்ற அங்கொட லொக்காவை பழி வாங்குவதற்காக கள்ளக்காதலி போல் நடித்து அங்கொடவுடன் சேர்ந்து இந்தியாவுக்கு தப்பி வந்ததாகவும் பெங்களூருவில் அங்கொட லொக்காவுக்கு நஞ்சு கொடுத்து கொன்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக அங்கொட லொக்காவின் பெயரை பிரதிப் சிங் என்று மாற்றி போலி ஆவணங்கள் தயாரித்து சடலத்தை மதுரைக்கு கொண்டு சென்று மூவரும் உடலை எரியூட்டி இருக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டு இருக்கிறார்கள்.